புதன், ஜூன் 17, 2009

கொலைக்கருவிகள்




பொசுக்கிவிடுங்கள் நல்ல
நகரத்தை அங்குதான்
பொன்விளைகின்றது என்பதால்
அறுத்து விடுங்கள் தொடுப்புகளை
படகுகள் கரைசேராது நாடு
கடந்து போகட்டும்

துடைத்து விடுங்கள் அறிவு
கிண்ணங்களை அவர்கள்
இருப்பதால்தான் உண்மை
விழுங்கப்படாது போகிறது


கூட்டிவாருங்கள் பேய்களையும்
பிசாசுகளையும் பிணங்களின்
மேல் இருந்து பிரசாரம் செய்ய
நாடு நல்ல நிலைபெற்றதென்று

விடைபெறுவார்கள் அறிவு
கிண்ணங்களும் அருள்நகரங்களும்
குருதி தோய்ந்த முகத்துடன்

பத்திரிகைகளே!வானொலிகளே!
தெலைக்காட்சிகளே பேசுங்கள்
உங்களை தொலைத்துவிடுபவர்
பற்றியல்ல உங்களிடம்
இருந்து பிரிந்தவர்கள் பற்றி!

குரு முதல் குரோதன் வரை
சட்டம் சனமென்ற நாட்டில்
கொலைக்கருவிகள் நீதி
தராசுகளில் ஏறி நீதிபதிகளை
கேட்டன வேண்டுமா
உன் உயிர் என்று.

Post Comment

கருத்துகள் இல்லை: